Loading...
Tuesday 23 July 2013

இறகுகளும் பாறைகளும்(சிறுகதை)

அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன
தினத்திலிருந்து.


ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன்
பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு
வயது எட்டு.

அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன.

அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று
இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு
மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி
தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு
விநோத  வாசனை வரும். ” என்னடா இது , புகையிலை நாத்தம் ?” என்பார் அப்பா. பதில்
இராது.

சிக்ரெட் பிடிப்பதைத் தாங்கிக்கொள்ளமுடியாத அப்பாவினால் காதலை எப்படி
தாங்கிக்கொள்ள இயலும் ? அண்ணாவின் காதல் கடிதத்தை , பத்மாவின் அப்பா எடுத்துக்
கொண்டு வந்து முகத்தில் வீசிய போது அவசியமில்லாமல் அப்பா குன்றிப் போனார்.
வீட்டிற்குள் நுழையாதே என்று அண்ணாவைப்  பார்த்து உறுமினார்.அண்ணா கெஞ்சுவான்
என்று நினைத்தார் போலும் . அவன் வாசல் நிலையிலேயே நின்று அவரை வைத்த கண்
வாங்காமல் அரை நிமிடம் பார்த்தான் . பின் விடுவிடுவென்று உள்ளே நடந்தான் . தன்
ஆணை தன் கண் முன்னாலேயே பொடிப்பொடியாக நொறுங்குவதை அப்பா உணர்ந்தார் .
அதிர்ச்சியோடு அவன் பின்னாலேயே ஓடி பிடரியில் அறைந்தார். அவன் திடுக்கிட்டுத்
த்ரும்பிய போது முகத்திலும் இரண்டு மூன்று அடிகள் விழுந்தன. தற்காப்பு என்று
நினைத்துச் செய்தானோ , அல்லது கோபம் தானோ – அண்ணா , அப்பாவை ஓர் அறை விட்டான்.
பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். அன்றைக்கு ராத்திரி அப்பா கயிற்றை
மாட்டிக் கொண்டார்.

அப்பாவின் சாவுக்கு அண்ணா வரவில்லை.பத்மாவை இழுத்துக் கொண்டு போயிருப்பானோ
என்று ஊர் முழுக்கச் சந்தேகம் . உறவுக்காரப் பெரிய மனிதர்கள் பத்மாவின்
வீட்டிற்குச் செல்லத் தயங்கினார்கள் . முகத்தில் கடிதத்தை வீசிய பத்மாவின்
அப்பா , யார் எவர் என்று பாராமல் தணலை வாரிக் கொட்டுவார் என்று எல்லோருக்கும்
பயம் . கட்டாயம் பத்மா வீட்டை விட்டுப் போயிருப்பாள் . அப்படிப் போயிருந்தால்
ஒரு புயல் நிச்சயம் என்று எல்லோரும் பயந்தார்கள் . அருணா ‘ வாருங்கள் மாமா ‘
என்று என்னை அழைத்துக் கொண்டு பத்மாவின் வீட்டிற்குப் போனாள் . வாசற்படியில்
நின்று குரல் கொடுத்தாள் . குரல் கேட்டுக் கதவைத் திறந்தது பத்மாதான்.

அருணாவின் இந்த தீரத்தை நான் பின்னர் அநேகம் தடவைகள் சந்தித்தேன் . உறவினர்
வீட்டில் ஒண்டிக் கொண்டு அவள் வளர்ந்த வருடங்களில் அவமானப் பட நேர்ந்த
போதெல்லாம் கண்ணீர் சிந்தாமல் பல்லைக் கடித்துக் கோண்டு துக்கம் முழுங்கிய
நேரங்களில் ; சமையல் , நீச்சல் , சைக்கிள் மூன்றும் கற்றுக் கொண்டால்,
உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நான்
சொன்னதை நம்பி சைக்கிள் கற்றுக் கொண்டதைத் தெருப்பையன்கள் கேலி செய்த போது ;
வேலைக்குப் போய்த் திரும்பிய பின்னர் இரவு ஏழுமணிக்கு மேல் டைப்ரட்டிங்
படிக்கப் போன இடத்தில் , இன்ஸ்ட்ரக்டர் தோள் மீது கை வைக்க , கால் செருப்பைக்
கழற்றிக் காண்பித்த போது .. அப்படிப் பற்பல தருணங்களில் அவளின் தீரத்தைச்
சந்த்தித்தேன்.

சரியோ தவறோ அந்த வீட்டில் எல்லா முடிவுகளையும் அருணாவே எடுத்தாள் . ஒன்பதாம்
வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு , திருவான்மியூரில் ஒரு பட்ட்றையில் காயில்
சுற்றினாள் . இரண்டு வருடம் கழித்து திருப்பதிக்குப் போய் மெட்ரிக் எழுதினாள் .
மெட்ரிக் முடித்த பின் பெர்சனல் செகரெட்டரி கோர்ஸில் சேர்ந்தாள்.

காயில் சுற்றுகிற வேலை , டைப் அடிக்கிற வேலையாக மாறியது . ஆறு வருடத்தில் பத்து
கம்பெனி மாறினாள் . ” என்ன அருணா இது , தடால் தடால் என்று வேலையை விட்டு
விடுகிறாய் ? ” என்ற கேள்விக்கு , ” வேலையில் தொடர்ந்தால் இருபத்தி ஐந்து
ரூபாய் இன்கிரிமெண்ட் வேலை மாறினால் ஐம்பது ரூபாய் சம்பளம் அதிகம். எது தேவலை ?
” என்று எதிர்க் கேள்வி வீசினாள்.

வாழ்க்கை எப்போதும் வெய்யில் காலமாகவே போய்விடுவதில்லை. வசந்தங்களும்
வருவதுண்டு . அருணாவின் வசந்தத்திற்குச் ஜெயச்சந்திரன் என்று பெயர். வேலை ,
சம்பாத்தியம்,குடும்பம் என்பது ஆண் பிள்ளையைப் போல் ஓடிக்கொண்டிருந்தவளைப்
பெண்ணாக்கி நாணச்செய்தான் அவன்.

தன்னுடைய பெயருக்குக் கடித்தம் வந்திருப்பதை எண்ணி வியந்து கொண்டே கவரை
உடைத்தவள் , அது பிறந்த நாள் வாழ்த்து என்பதை அறிந்து காலண்டரை நிமிர்ந்து
பார்த்தாள் . ஆமாம், அது அவள் பிறந்த தினம் தான் .. பள்ளிக்கூட சர்டிபிகேட் படி
, பதினெட்டு பிறந்த தினங்கள்  வந்து போய் விட்டன. ஆனால் இது வரை யாரும் ‘ மெனி
ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே’ என்று கை குலுக்கியதில்லை . ‘ தீர்க்காயுசா
இரும்மா’ என்று வாழ்த்துச் சொன்னதில்லை. கேக் வெட்டியதில்லை. பாயாசம்
குடித்ததில்லை. புதிது அணிந்ததில்லை.கோயிலில் அவள் பெயரில் அர்ச்சனை
நடந்ததில்லை. பதினெட்டு வருடங்களாக இல்லாமல் இன்று ரோஜாப்பூக்கள் சிரிக்கும்
வெளி நாட்டு கார்டு . யார் ?

மனத்தை கேள்வி பொய்த்தது . யார் என்று அறிந்து கொள்ளாமல் , தலை வெடித்து விடும்
போல் பரபரத்தது. கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவாரம் , பத்து நாள் என்று
அநேகமாக மறந்துவிட்ட போது பக்கத்துஸீட் ஜான்ஸி  , “ம்க்கும் , இதற்கு ஒன்றும்
குறைச்சலில்லை,” என்றபடி குப்பைத் தொட்டியில் வீசியதைப் பார்த்தாள்.

ரோஜாப்பூக்கள் சிரிக்கும் வெளி நாட்டுப் பிறந்த நாள் கார்டு !

” என்ன ஜான்ஸி ?”

இந்த ஆபீஸில் கிராக் ஒண்ணு இருக்குது . யாருக்குப் பிறந்த நாள்ன்னாலும்
வாழ்த்து ஒண்ணு அனுப்பிச்சிடும்.

” யாரு அந்த கிராக் ?”

“ஜெயச்சந்திரன்னு ஒண்ணு வருமே , பார்த்ததில்லே ? உசரமா , கிழவன் மாதிரி ஃபுல்
ஆர்ம் ஷர்ட் போட்டுகிட்டு … “

” ஃபுல் ஆர்ம் ஷர்ட் போட்ட கிறுக்கனைப் பார்க்க ஆவல் இழுத்தது . தண்ணீர்
குடிக்கப் போவது போல் எழுந்து போனாள்.

” தாங்க்ஸ் , ” என்ற குரலுக்கே அவன் திடுக்கிட்டான்.

“எதுக்குங்க ?”

“ரோஜாப்பூக்களுக்கு “

பெண் பிள்ளையைப் போல் நாணினான்.

” பர்த் டேயை எப்படி கண்டு பிடிச்சீங்க ? “

” பெர்சனல் டிபார்ட்மெண்ட் வேலையில் இருந்துகிட்டு இதைக்கூடக் கண்டுபிடிக்க
முடியலைன்னா எப்படி ? “

“இப்படி எல்லோருக்கும் அனுப்புவீங்களா ?”

” எனக்கு இருபத்திரெண்டு வயசாச்சு. இன்னிக்கு வரைக்கும் ஒரு பர்த்டே கார்டு
வந்ததில்லை. வந்ததில்லைன்னு அழுவானேன் ? நாம தான் நாலு பேருக்கு
அனுப்புவோமேன்னு ஆரம்பிச்சேன்.”

அருணாவிற்கு சுரீரென்றது . நமக்கும் தான் இத்தனை நாள் வாழ்த்து வந்ததில்லை.
ஆனால் நாம் வாழ்த்து அனுப்பி வைப்போம் என்று ஏன் தோன்றவில்லை ? சட்டென்று
ஜெயச்சந்திரன் மீது மலைபோல மதிப்பு ஏற்பட்டது. ” நீங்க விர்கோவா ,
சாஜிட்டேரியஸ்ஸா ? “

” அ! அவ்வளவு சுலபமா பர்த்டேயைத் தெரிஞ்சுக்கலாம்னு பாக்காதீங்க . வாழ்த்துச்
சொற சந்தோஷம் போதுமுங்க எனக்கு “

முதல் முறையா அந்த வருடம் அவன் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து வந்தது.

” இது வெறும் அட்மிரேஷனா ? இல்லை , காதல் என்று எடுத்துக் கொள்வதா ? என்று நான்
கேட்ட போது அருணா , சிரித்து முகம் சிவந்தாள் . இத்தனை நாள் பொதி சுமந்த
தோளுக்கு இப்போது மாலை விழுந்த்ததே  என்று என் மனசு சிரித்தது.

அதற்கப்புறம் அருணாவிற்கு என்னைப் பார்க்க அவகாசம் இல்லை . அவ்வப்போது போனில்
பேசினாள் . ஒரு நாள் ஜெயச்சந்திரனை கூட்டி வந்து அறிமுகம் செய்து வை என்று
சொன்னேன். ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிச் சொல்லி நாட்கள் பறந்தன. அல்ல ,
நாட்கள் அல்ல , வருடங்கள் . இரண்டு வருடங்கள்.

அருணாவின் முகமே அவன் மனதைக் காட்டிக் கொடுத்தது. தொட்டால் ஒடிந்து விடுவது போல
நொய்ந்து போன மனம்.

” என்ன அருணா , வழி தெரிந்ததா ? “

” என்னோட வழி எல்லாமே சுவரில் முடிகிறது மாமா . “

” என்னம்மா  ? “

” அவர நல்லவர் தான் . ரொம்ப ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் நல்லவர் . அதனால்
தான் அவங்க அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட முடியலை.”

சொல்லும் போதே அருணா உடைந்தாள் . கையைப் பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி
அழுதாள் . பத்து வருடங்களாக எதற்கும் அழுதிராத அருணா விசும்பி அழுதாள்.

பாளம் பாளமாக எத்தனையோ பாறைகளைச் சுமந்து கொண்டு தீரத்துடன் முன்னேறிய பெண் ஒரு
மயிலறகின் கனம் தாங்க மாட்டாமல் பார்த்து வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்தேன்

*(குமுதம்)*

0 comments:

Post a Comment

 
TOP