திருமணமாகி சிலவருடங்கள் குழந்தையின்றி இருந்த லலிதா அதிர்ஷ்டவசமாக கருவுற்றிருந்தாள், லலிதாவிற்கு மகிழ்ச்சி. எங்கே தான் தாய்மைப் பாக்கியத்தை அடைய முடியாமலேயே போய்விடுவோமோ என்று எண்ணியிருந்த தனது வயிற்றில் இறைவன் பால்வார்த்து விட்டான். இறைவனுக்கு நன்றியை மனதாரக் கூறிக் கொண்ட லலிதா தனது தோழியிடம் இதைச் சொல்லிவிட்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காகத்தான் மருத்துவமனைக்கு வந்தாள்.
மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் காயத்ரியின் அறைக்குள் நுழைந்தாள் லலிதா. நோயாளிகளைச் செக்கப் செய்து கொண்டிருந்த காயத்ரி லலிதாவைப் பார்த்தவுடன் அகமும் முகமும் மலர வரவேற்று அருகிலிருந்த இருக்கையில் அமருமாறு கூறிவிட்டு தனது பணியைத் தொடர்ந்தாள்.
நோயாளிகள் அனைவரும் சென்றவுடன் லலிதாவைப் பார்த்த காயத்ரி, “ஆமா எப்படி இருக்கறே லல்லி. ஏதாவது விசேஷமா?” என்று குறும்பாகக் கேட்டாள். அதனைக் கேட்ட லலிதாவிற்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் வெட்கப்பட்டுக் கொண்டே விஷயத்தைக் கூறினாள்.
காயத்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. “வாழ்த்துக்கள் லல்லி.. வா உடனே எல்லாத்தையும் தரவா செக்பண்ணி ரிசல்ட்ட சொல்லிடறேன்..வாவா..” என்று தனது தோழியை அழைத்துக் கொண்டு லேப்பிற்குள் சென்றாள்.
அங்கு முதலில் ஸ்கேனிங் பார்த்தாள். டாக்டர் காயத்ரியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, லலிதாவை மறு கண்ணால் பார்த்தாள். "குழந்தை எல்லாம் நல்லா இருக்கா டாக்டர்?" என்ற லலிதாவின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் "லல்லிம்மா… உன்கூட யாரும் வரலையா?" என்று கேட்டாள்.
தன் தோழியாக இருந்தாலும் அவளுக்குரிய இடத்திற்குரிய மதிப்பினைக் கொடுக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பாள் லலிதா. அதனால் டாக்டர் என்றே காயத்ரியை அழைத்தாள். லலிதாவை டாக்டரின் கேள்வி இயல்பிற்குக் கொண்டு வந்தது.
"இல்ல டாக்டர், என் வீட்டுக்காரருக்குத் திடீர்னு ஒரு மீட்டிங், நான் ஆபீஸ்லேந்து நேரா வந்தேன். அதனால என்னோடு அம்மா கூட வரமுடியல. ஏன் டாக்டர் என்ன விஷயம்? குழந்தை நல்லா இருக்கு இல்லையா?"
"இல்ல…..அது…..வந்து...."
"டாக்டர், ஸ்கேன் பார்த்ததுக்குப் பிறகு உங்க முகம் மாறிப்போச்சு. இப்போ நீங்க என்கிட்ட விஷயம் சொல்லலைனா நான் என்னவோ ஏதோன்னு பயந்து ராத்திரி பூரா தூங்கமாட்டேன். என்கிட்டே என்ன விஷயம்னாலும் சொல்லுங்க டாக்டர்," லலிதாவின் குழந்தை போன்ற முகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி காயத்ரி, "லல்லி உன் ஸ்கேன்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கம்மா" என்று கண்கலங்கியபடி கூறினாள்.
"என்ன டாக்டர்?"
"குழந்தையோட உறுப்புகள் சரியா வளரலை" திடுக்கென்று தனது அடிவயிற்றைப் யாரோ இறுக்கிப் பிடித்துப் பிசைந்தது போல் உணர்ந்த லலிதா நடுங்கிய குரலில், "இது அஞ்சாவது மாசம்தானே டாக்டர் போகப்போக சரியாயிடும் இல்லையா?" என்றாள்.
"சரியாயிடும்னா நான் சொல்லி இருக்கவே மாட்டேன் லல்லி. குழந்தையோட இருதயம் சரியா வளரல. குழந்தைக்கு கிட்னி வளர்ச்சியும் சரியா இல்ல. இப்படி நிறைய குறை இருக்கு" என்று மனவேதனையுடன் கூறினாள் காயத்ரி.
லலிதாவின் முகம் இருண்டு போனது. அவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட காயத்ரி,"லல்லி இந்தக் கர்ப்பம் முடியற வரைக்கும் வெயிட் பண்றது அனாவசியமான்னு நான் நினைக்கறேன். நீ வேணும்னா வேற ஒரு டாக்டர்கிட்ட இன்னொரு ஒபீனியன் கேட்டுக்கோ. ஆனா இந்தக் குழந்தை நல்லபடியா உயிரோட பிறக்கறது கஷ்டம். அப்படியே பிறந்தாலும் ரொம்ப நாள் அது தாங்காது" என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக டாக்டர் கூறியதை உள்வாங்கிய லலிதா, "காயத்ரி, நீ டாக்டர் மட்டும் இல்ல என்னோட நெருங்கிய ஃபிரெண்டும் கூட. நீ என்ன சொன்னாலும் நான் நம்பறேன். இன்னொரு டாக்டர்கிட்ட போக வேண்டாம்" என்றாள்.
"அதான் ஒரு ஃபிரெண்டா நான் சொல்றேன் லல்லி, குழந்தை... கஷ்டம்." என்று மென்று விழுங்கினாள் காயத்ரி.
"காயத்ரி எதுவும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியாதா?"
"சரி செய்ய முடியுமா முடியாதாங்கறது இப்போ சொல்றது கஷ்டம். குழந்தை பிறந்த பின்னாடி குழந்தையைப் பார்த்துதான் சொல்ல முடியும். ஆனா என்னோட அனுமானம் குழந்தை நல்லபடியா பிறக்கறதே கஷ்டம்".
"குழந்தைக்குச் சிகிச்சை செஞ்சு சரி செய்யக்கூடிய சதவிகிதம் எவ்ளோ காயத்ரி?"
"ஒரு சதவிகிதம்தான் லல்லி. குழந்தை ஆரோக்கியமா பிறக்கும் அப்படிங்கற சதவிகிதம்கூட ஒரு அரைதான். நீ வீட்டுக்குப் போய் உன்னோட கணவர்கிட்ட பேசு. நீ சரின்னு சொன்னா இன்னும் ஒரு வாரத்தில கலைக்க முயற்சி பண்ணலாம். அதுக்கு அப்புறம் முடியாது."
"எதுக்குக் கலைக்கணும் காயத்ரி?"
"நான் சொல்றது புரியலையா லல்லி? குழந்தை சிகிச்சை மூலம் பிழைச்சாலும் ரொம்ப நாள் தாங்காது லல்லி. இவ்ளோ குறைகளோட ஒரு குழந்தை பிறக்கறதே கஷ்டம். அதனால இப்போவே கலைச்சுட்டா உன்னோட துக்கம் ஓரளவுக்குக் குறையும். நீ வேணும்னா இன்னொண்ணு பெத்துக்கலாம்."
"அரை சதவிகிதம் சான்ஸ் இருக்கு இல்ல. அதுக்கு முயற்சி செஞ்சா என்ன?"
"ம்ம்.... வீட்டுக்குப் போய் யோசிச்சு சொல்லு லல்லி."
"என்ன யோசிச்சாலும் குழந்தையைப் பெத்துக்கற முடிவுதான் எடுப்பேன் காயத்ரி" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.
ஏதோ முள்படுக்கை மீது படுத்த பீஷ்மர் போல், மீதி ஐந்து மாத கர்ப்ப காலத்தைக் கடந்தாள் லலிதா. காயத்ரியின் அரை சதவிகிதம் உண்மையாகி, குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தைக்கு ரேகா என்று பெயரிட்டாள் லலிதா. மேலும் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையின் உடல்நலம் பேணுவதில் செலவழித்தாள்.
குழந்தை ரேகாவிற்கு ஒன்பது மாதம் ஆயின. எத்தனையோ சிகிச்சை செய்தும் ரேகா ரொம்ப நோஞ்சானாகவே இருந்தாள்.
"லலிதா, நீ கொஞ்சம் சாப்பிடு" இது லலிதாவின் அம்மா. "இரும்மா ரேகாவுக்குக் கொஞ்சம் சளி பிடிக்கறாப்பல இருக்கு, நான் எதுக்கும் விக்ஸ் தடவிவிட்டு வரேன்."
"இந்தக் குழந்தையை பார்த்துக்கிட்டே இருக்கியே தவிர உன் உடம்பைக் கவனிக்கறியா? அந்தக் குழந்தை இன்னும் எத்தனை நாள் தாங்கப் போகுதோ அதுக்காக உன் உயிரை விடறியே."
திடுக்கென்று நிமிர்ந்தாள் லலிதா, "என்னம்மா சொல்ற? யோசிச்சுதான் பேசறியா? நாளைக்கே எனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தா, எனக்குச் சரி பண்ண நினைப்பியா இல்ல, அதவிட்டு ஒன்னோட ஒடம்பப்பத்தி யோசிப்பியா? உனக்கு உன் பொண்ணு உடம்பு மாதிரி, எனக்கு என் பொண்ணு உடம்பு முக்கியம் அம்மா. இனிமே இப்படி தத்துபித்துன்னு பேசாதே."
என்னன்னவோ செய்தும், எப்படிப் பார்த்துக்கொண்டும் விதிப்படி ரேகா தன்னுடைய பத்தாவது மாதத்தில், தன்மீது உயிராக இருந்த லலிதாவை விட்டுப் போனாள். லலிதாவைத் தேற்ற வந்தவர்கள் விக்கித்துப் போனார்கள்.
என்ன சொல்வது என்று அறியாமல் பலரும் அமைதியாகச் சென்றனர். "நானும் ரொம்பநாள் சொன்னேன் போகப்போற குழந்தைக்காக நீ தேயாதேன்னு, கேட்டாளா?" என்று அம்மா புலம்ப, வெடுக்கென்று எழுந்து வந்தாள் லலிதா.
"அம்மா பிறப்பும், இறப்பும் நம்ம கையில இல்ல. மனுஷனாப் பிறந்தா எல்லோருமே ஒருநா இறக்க வேண்டியதுதான். அது கடவுளோட தீர்ப்பு. நானே ஒரு மாசம் கழிச்சு இறக்கப் போறதா உனக்கு தெரிஞ்சா, அடுத்த மாசம் போற நீ இப்போவே போடின்னு அனுப்பி வைப்பியா சொல்லு? டாக்டர் அஞ்சு மாசத்துல கலைக்கச் சொன்ன கருவ என்னால முடிஞ்ச வரைக்கும் உயிர் கொடுத்தேன். அதனால எனக்கு துக்கம் அதிகமா இருக்கறதப் பத்தி யோசிக்கற நீ ரேகாவால எனக்குத் தாய்மைங்கிற நிறைவு கிடைச்சுதே அதப்பத்தி யோசிக்க மாட்டியா?. எல்லா உயிர்களுக்கும் இறப்பு என்ற முடிவைக் கடவுள் கொடுத்தாலும் தாயால் பிறப்பைத்தான் கொடுக்கமுடியும். என்னால முடிஞ்சவரை நான் என் ரேகாவுக்கு உயிர் கொடுத்துப் பார்த்துகிட்டேன் என்ன மலடிங்ற பட்டத்துல இருந்து கரையேத்தினவ அவதான்…..” என்று சொன்னபடி அழுதாள் லலிதா.
அன்றுவரை மகளாக மட்டுமே லலிதாவைப் பார்த்த அம்மா, அவளை முதன்முதலாக ஒரு தாயாகப் பார்த்தாள். அங்கு தாய்மையின் நிறைவு பூரணமாக பளிச்சிட்டதைக் கண்டு பிரமித்து நின்றாள்.
0 comments:
Post a Comment